Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Sunday 28 December 2014

2014 முதல் 2015வரை - ஒரு அதிர்ச்சியான "377" பயணம்...



                                
                          

“2014” பாலீர்ப்பு சிறுபான்மையினர் வரலாற்றில் இதையும் ஒரு சாதாரண ஆண்டாக கருதி கடந்துவிடமுடியாது... 2009ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் “மனித உரிமைகள் பாதிக்கப்படுவதாலும், குறிப்பிட்ட சிலரின் மீது மட்டும் பாரபட்சமான தண்டனை வழங்கப்படுவதாலும் சட்டப்பிரிவு 377இல் திருத்தம் கொண்டுவரவேண்டும்!” என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது... அடுத்த நான்கே ஆண்டுகளில், அதாவது கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், “ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றமே... இயற்கைக்கு முரணான அந்த செயலில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனையாக, ஆயுள்தண்டனை கொடுக்கப்படலாம்” என்கிற தீர்ப்பை அளித்து, நம்மையெல்லாம் கால எந்திரமே இல்லாமல் ‘காலனிய ஆட்சி காலத்து’க்கு கொண்டுசேர்த்தது உச்சநீதிமன்றம்......

இந்த தீர்ப்பு வெளியாகி சரியாக ஒரு வருடம் முடிந்துவிட்டது... இந்த ஒரு வருடம் (2014) கண்டிப்பாக இந்திய ஒருபால் ஈர்ப்பு சமூகத்தினர் வரலாற்றில் பொறிக்கப்படவேண்டிய அளவிற்கு முக்கியத்துவமான ஆண்டு... அந்த அளவிற்கு தீர்ப்பு வெளியாகி, நம்மை அரசு மீண்டும் குற்றவாளிகளாக அறிவித்தபிறகு நாடு முழுக்க ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு அசாதாரணமானது... பெரிய அளவில் விளக்கவேண்டாம் என்றாலும், ஒரு சிறு உதாரணத்தை சொல்லலாம்... இப்போதல்லாம் நாம் ஒருபால் ஈர்ப்பை பற்றி புரியவைக்க பக்கம் பக்கமாக விளக்க வேண்டாத அளவிற்கு, ஒரு குறிப்பிட்ட எண் மட்டுமே ஆயிரம் பக்கத்து விளக்கத்தை கொடுத்துவிடும்... அந்த மந்திர எண் “377”. எந்த எண், நமது உரிமைகளை பறிக்க அடையாளக்குறியீடாக இந்த சட்டத்தினால் அடையாளப்படுத்தப்பட்டதோ, அதே எண் இன்றைக்கு போராட்ட வடிவத்தின் ஒரு அங்கமாக மாறிய நிகழ்வு ஒரு வரலாற்று வெற்றிதான்..

இத்தகைய விழிப்புணர்வு அடைவதற்கான காரணகர்த்தாவாக தனிப்பட்ட நபர் எவரையும் குறிப்பிட முடியாது என்றாலும், இந்த ஓராண்டு காலமும் ஓய்வில்லாது உழைத்த பாலீர்ப்பு சிறுபான்மையினருக்கான அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என்று எல்லோருடைய ஒன்றுபட்ட ஒருங்கிணைவு மட்டுமே இதை சாத்தியப்படுத்தி உள்ளது... 

அதேநேரத்தில் இவ்வளவு பிரச்சாரங்களும், சட்டம் பற்றிய விழிப்புணர்வும் ஒருவித எதிர்வினையை இந்த சமூகத்தில் உண்டாக்கி இருப்பதையும் நாம் மறுக்கமுடியாது... அந்த எதிர்வினைகள் பற்றியும், அதனை எந்த விதத்தில் களைவது என்பது பற்றியும் இனி பார்க்கலாம்...

“377” பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் கண்டிப்பாக சமூக தளத்தில் பாலீர்ப்பு சிறுபான்மையினர் உரிமைகள் பற்றிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, எனினும் இதே விஷயம் பாலீர்ப்பு சிறுபான்மையினரை மிரட்டி ஒடுக்கும் அச்சுறுத்தல் மிக்க ஆயுதமாகவும் உருமாறியுள்ளது... 

மதுரையை சேர்ந்த நண்பர் ஒருவர் தன்னை முழுமையாக வீட்டில் வெளிப்படுத்திக்கொண்டவர்... தன் பாலீர்ப்பை குடும்பத்தினருக்கு வெளிப்படுத்தி, புரியவைத்து ஒருவழியாக அவர்களை ஏற்கவைத்த சமயத்தில்தான் கடந்த வருடத்தில் தீர்ப்பு வெளியானது... ஓரினச்சேர்க்கை ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாக சட்டம் கருதும்போது, ‘தங்கள் மகன் சிறையில் இருக்கவேண்டிய சூழல் உருவாகுமோ?’ என்கிற அச்சத்தில், இப்போது மகனுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்துவைக்க நிர்பந்திக்க தொடங்கிவிட்டார்கள்...

சென்னையை சேர்ந்த இன்னொரு நபர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர்... தீர்ப்பிற்கு பிறகு, குடும்ப நிர்பந்தத்தால், இப்போது வேறு நாட்டிற்கு தஞ்சம் புக தயார் ஆகிவருகிறார்....

இதுதான் இன்றைக்கு குடும்பங்களில் பாலீர்ப்பு சிறுபான்மையினரின் நிலைமை... இந்த தீர்ப்பு அப்படியோர் அதிர்வை குடும்பத்தினர் மத்தியில் உண்டாக்கிவிட்டது... எவ்வளவுதான் பாலீர்ப்பு பற்றிய புரிதலும், தெளிவும் இருந்து தங்கள் பிள்ளையின் பாலீர்ப்பை ஏற்றாலும் கூட, இந்த பெற்றோர்களால் புதிய தீர்ப்பை எதிர்கொள்ள முடியவில்லை... ஒன்று வெளிநாட்டிற்கு அகதியாக தஞ்சம் புகவேண்டும், இல்லையேல் ஒரு பெண்ணை மணம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற இரண்டே வாய்ப்புகளைத்தான் குடும்பத்தினர் யோசிக்கும் நிலை உண்டாகிவிட்டது.... 

குடும்பத்தினர் மட்டுமல்லாது, பணிபுரியும் இடங்களிலும் இந்த தீர்ப்பு ஒரு ஆபத்தான தாக்கத்தை உண்டாக்கியுள்ளதாக கவின் மௌலி என்ற மென்பொருள் ஊழியர் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.... பெரும்பாலும் மேற்குலக நாடுகளை மையமாக கொண்டுள்ள மென்பொருள் நிறுவனங்கள்தான் நம் நாட்டில் செயல்பட்டுவருகின்றன என்பதால், அந்த நாடுகளின் சமூக சூழலை பொறுத்தே நிறுவனங்களின் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.... ஆக, இங்கே செயல்படும் மென்பொருள் நிறுவனங்களில் பாலீர்ப்பு ரீதியான பாகுபாடு இருக்கக்கூடாது, ஒருபால் ஈர்ப்பு தம்பதிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நிறுவன விதிமுறை... ஆனால், இப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பால், அந்த விதிமுறைகள் இந்தியாவிற்கு பொருந்தமுடியாத சூழல் உண்டாகியுள்ளது... அதிகாரப்பூர்வமாக எந்த மென்பொருள் நிறுவனங்களிலும் பாலீர்ப்பு சிறுபான்மையினர்களுக்கான குழுமம்/அமைப்பு உருவாக்கமுடியாத சூழல் உண்டாகியுள்ளது...

இப்படி குடும்பத்தினர் மற்றும் பணியிட சூழல் என நமக்கு நெருக்கமான இடங்களில் இந்த தீர்ப்பும், சட்டப்பிரிவு 377ம் இந்த அளவிற்கு தாக்கத்தை உண்டாக்கியுள்ளது என்பதை கண்கூடாக நம்மால் பார்க்கமுடியும்... 

சரி, அப்படியானால் இந்த சட்டப்பிரிவு சட்டரீதியாக எந்த அளவிற்கு நம்மவர்கள் மீதான அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது? என்பதை விளக்க ஓரிரு உதாரணங்களை சுட்டிக்காட்ட விழைகிறேன்...

பெங்களூரு மருத்துவர் ஒருவரை சில இளைஞர்கள், அவருடைய அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டி, லட்சங்களை பறித்த செய்தியை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்... இந்த விஷயம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, மிரட்டிய இளைஞர்களுக்கு முன்பு கைதாகி, இப்போது சட்டப்பிரிவு 377ன் கீழ் அந்த மருத்துவர் சிறையிலடைக்கப்பட்ட நிகழ்வு நாம் அறிந்ததே... 

அதே பெங்களூருவை சேர்ந்த மென்பொருள் நிறுவன ஊழியர், தன் மனைவியின் மூலம் புகார் கொடுக்கப்பட்டு, அந்த நபர் 377ன் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு நடந்து ஒரு மாதம்தான் ஆகியிருக்கும்...

இப்படி சட்டரீதியான ஒடுக்குமுறைகளை பற்றி ஒன்றிரண்டு உதாரணங்களை நாம் சொல்ல முற்பட்டாலும், இத்தகைய காவல்துறை சார்ந்த வழக்குகள் பதிவுசெய்திருப்பது மட்டும் எவ்வளவு தெரியுமா?... ஹம்சாபர் ட்ரஸ்ட் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் சமீபத்தில் இதுபற்றி எடுத்த ஆய்வில், “குறிப்பிட்ட ஐந்து மாநிலங்களில் மட்டும் இந்த ஓரினச்சேர்க்கை புகாரால் வழக்கு பதிவுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை  264…. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும், இரட்டிப்பு மடங்கு அதிகமாகியுள்ளது” என்கிற அதிர்ச்சியான முடிவை அறிவித்துள்ளனர்....  சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் இதுதொடர்பான ஒரு புள்ளிவிபரம் வெளியிடப்பட்டது... அதில், இந்த சட்டப்பிரிவின் கீழ் அதிகமாக வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட மாநிலம், டெல்லி (140 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, கைதான நபர்களின் எண்ணிக்கை 110)...

இதேபோன்று உத்திர பிரதேசம் (127 வழக்குகள், 36 கைதுகள்), மகாராஷ்டிரா (98 வழக்குகள், 100 கைதுகள்), ஹரியானா (99 வழக்குகள், 89 கைதுகள்) என்று பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை இந்த மாநிலங்கள் பிடித்துள்ளன.... இதற்கு முன்பு இல்லாத அளவில் ஒரு குறிப்பிட்ட வழக்கின்கீழ், குறுகிய காலத்தில் இவ்வளவு வழக்குகளும், கைதுகளும் மிகவும் அதிர்ச்சியளிக்கும் நிகழ்வுகள்தான்...

இதுபற்றி நாஸ் பவுண்டேசனின் அஞ்சலி கோபாலன் அவர்கள் தெரிவிக்கையில், “குற்றத்திற்காக வழக்குகள் பதிவுசெய்வதைவிட, இப்போது அதிகமாக மிரட்டலுக்கான ஆயுதமாகவே இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டுவருகிறது” என்கிறார்... இந்த நாஸ் பவுண்டேசன்தான் இப்போதுவரை இந்த சட்டப்பிரிவினை நீக்கக்கோரி தீவிரமான செயல்பாட்டில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது... 

ஒருபுறம் இப்படி வழக்குகளால் மிரட்டப்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவரும் சூழலில், சமீப காலங்களில் இந்த சட்டப்பிரிவை சமூக விரோதிகள் தங்கள் மிரட்டலுக்கான ஆயுதமாக பயன்படுத்தி வருவதை பரவலாக பார்க்கமுடிகிறது... ஆமாங்க... சட்ட ரீதியாக எந்த அளவிற்கு நம்மவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்களோ, அதைவிட சட்டத்திற்கு புறம்பான நபர்களாலும் நம்மவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்பதும் அதிர்ச்சியான உண்மை...

காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்றார்போல சமூக விரோதிகளும் தங்களை அப்டேட் செய்துகொண்டிருப்பது நாம் அறிந்ததே... அந்த வகையில் புதுவரவு “ஒருபால் ஈர்ப்பாளர்கள் போர்வையில் ஏமாற்றுக்காரர்கள்” என்பதுதான்... இன்றைக்கு நாம் சமூக வலைதளங்களிலும், பிளானட் ரோமியோ போன்ற டேட்டிங் தளங்களிலும் எதேச்சையாக கடக்கும் பத்தில் ஒருவர் இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களாக இருக்க வாய்ப்புண்டு... பணம், பொருள், ஏடிஎம் கார்டு, பைக், அலுவலகத்தில் வேலை என்று அந்த சமூக விரோதிகள் பலவிதத்திலும் நம்மவர்களை ஏமாற்றியது நித்தமும் நடந்துவருகிறது.. இந்த ஒருவருடத்தில் மட்டும் நான் கேள்விப்பட்ட இத்தகைய ஏமாற்றுகள் மட்டும் நூறை தாண்டும்... 

அவை எல்லாவற்றையும் இங்கே தொகுப்பதென்றால் இன்னொரு வருடம் தேவைப்படலாம்... ஆனால், ஏமாந்த எல்லா நபர்களின் மனநிலையும் சிதிலம் அடைந்தேபோய்விட்டதை என்னால் உணரமுடிந்தது... பணம், பொருள் எல்லாம் போனாலும் பரவாயில்லை, மொத்தமாக மனநிம்மதியை இழந்து தவித்தார்கள்... எல்லோரையும் நோக்கிய ஒரே ஆயுதம், “377”தான்... 

இந்த புறக்கணிப்புகள், ஏமாற்றுதல்கள், மிரட்டல்களின் கடைசி புள்ளி எது தெரியுமா?... பலரின் தற்கொலை... சில மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த பிரவீன் என்கிற இளைஞன் இறந்தார்... நம் அமைப்புகள் பலவும் அவருக்கு இரங்கல் கூட்டம் கூட நடத்தினார்கள்... கடந்த ஓரிரு மாதங்களிலேயேகூட எனக்கு தெரிந்தவரை நான்கைந்து இறப்புகள், அத்தனையும் தற்கொலைகள்... ஆனால், எந்த தற்கொலைக்கும் காரணமாக பாலீர்ப்பு பதிவுசெய்யப்பட மாட்டாது... குடும்பத்தினரும், நண்பர்களும் துக்கத்திற்கு அழுவதைவிட, இறப்பின் காரணத்தை மூடிமறைக்க பகீரத பிரயத்தனம் செய்வார்கள்...

ஆனால், உண்மையான காரணங்கள் எல்லோரும் அறிந்ததே... எத்தனையோ தற்கொலைகள், கணக்கில் அடக்கமுடியாத தற்கொலை முயற்சிகள் என இந்த ஓராண்டு நான் கவனித்தவரையில் ஆபத்தான பாதையில் பயணித்ததாகவே தெரிகிறது...

இந்த எல்லா பிரச்சினைகள் மற்றும் இழப்பிற்கும் காரணம் என்ன என்று இதற்கு மேலும் விளக்கம் சொல்லவேண்டுமா என்ன?... ஒரே வார்த்தையில் கூட அதற்கான காரணத்தை சொல்லமுடியும், அது “377”… அப்போ என்னதான் இதற்கு தீர்வு? கொஞ்சம் யோசிக்கணும்... நாம நினைத்த உடனேயே அந்த சட்டப்பிரிவை நீக்கவல்லாம் முடியாதுதான்... ஆனால், அதிலுள்ள ஆபத்துகளை போக்க அமைப்புகள் இனி போராடனும் என்பதுதான் நம் கோரிக்கை.... விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அமைப்புகளின் வெற்றி நிச்சயம் போற்றுதலுக்கு உரியது... அதே முக்கியத்துவத்தை நம் அமைப்புகள் நம்மவர்களின் பாதுகாப்பை மையப்படுத்திய பிரச்சினைக்கும் அளிக்கவேண்டும் என்பது நம் விருப்பம்....

சட்டப்பிரிவு 377 நிச்சயம் மிரட்டலுக்காக பயன்படுத்தப்படுவது நாம் அறிந்ததே... அப்படி ஆபத்துகளில் சிக்கும் நம்மவர்களை காக்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.... நம் அமைப்பினர், சட்ட வல்லுனர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல தரப்பை சார்ந்தவர்களையும் இணைத்த குழுவாக அது இருத்தல் வேண்டும்... அந்த சட்டப்பிரிவை சொல்லி மிரட்டப்படும் நபர்கள் எளிதில் அணுகி, இலவச சட்ட ஆலோசனை பெறுவது பற்றியும், பாதிக்கப்பட்ட நபர்கள் பிரச்சினைகளிலிருந்து மீள்வது பற்றியும் அந்த குழுமம் ஆலோசனைகள் வழங்க வேண்டும்... மேலும், பணம் மற்றும் பொருட்களை பறிக்கும் ஏமாற்றுக்காரர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கமுடியும்? என்பதுபற்றியும் அந்த குழு பரிந்துரைக்க வேண்டும்...

377 பாதுகாப்பு மீட்புக்குழு” அப்படி உருவாகி செயல்பட்டால்தான், நம்மவர்களும் பயமின்றி பாதுகாப்போடு இனி செயல்பட முடியும்... அதேபோல, இனி ஏமாற்றுபவர்களும் கொஞ்சம் அடங்கி ஒடுங்குவார்கள்.... அதனால், இனிவரும் 2015ஆம் ஆண்டு நம் ஒருபால் ஈர்ப்பு நபர்களின் பாதுகாப்பிற்கு வழிவகை செய்துகொடுக்கும் ஆண்டாக இருந்திட நாம் எல்லோரும் இணைந்து பயணிக்கவேண்டும்...
 
அது வரும் ஆண்டில் நடக்கும் என்கிற நம்பிக்கையோடு, அனைவருக்கும் “இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!” சொல்லி விடைபெறும்.... உங்கள் விஜய்...

Sunday 21 December 2014

முதல் காதல், முற்றிலும் காதல்...! - சிறுகதை...




இன்றைய அலுவலக வேலைகள் மூன்று மணிக்கே முடிந்துவிட்டது... வழக்கமாக ஆறை தாண்டியும் ஜவ்வாக இழுக்கும் பணிகள், இவ்வளவு விரைவாக முடிவது எப்போதாவது நிகழும் ‘மெடிக்கல் மிராக்கில்’கள்தான்... பசி வயிற்றை பிடுங்கினாலும், கேண்டின் பக்கம் செல்ல பிடிக்கவில்லை... ஈக்கள் குடித்து மீந்துபோன காபியை பேதம் பார்க்காமல் குடிக்க மனம் ஒப்பவில்லை... எப்படியும் நான்கு மணிக்கு வீட்டிற்கு சென்றுவிடலாம், அம்மா கையால் காபியை ஹாயாக சோபாவில் அமர்ந்தபடி ரசித்துக்குடிக்கலாம்... 3.10க்கு வாகன நிறுத்துமிடத்தை அடைந்துவிட்டேன்... எப்போதும் பாரதிராஜா படத்து நாயகியைப்போல தலையை சாய்த்து ஏக்கத்தோடு என்னை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் என் பல்சர் பைக், இன்றைக்கு என் வரவை பார்த்ததும் முருங்கைக்காய் சாப்பிட்ட முறுக்கோடு சிலிர்த்து நின்றது... மெல்ல அதன் தலையை தட்டி, வண்டியை கிளப்பினேன்...

இவ்வளவு விரைவாக வீட்டிற்கு போவதில் அப்படி என்ன சந்தோஷம்?... ரெஸ்ட் எடுக்கலாம், நண்பர்களோடு வெளியே சுற்றலாம், பேஸ்புக்கில் காதலன் தேடலாம்... ஆனால், இது எல்லாவற்றையும்விட ‘அதிக ட்ராபிக்கில் சிக்கிக்கொள்ளாமல் வீட்டிற்கு செல்லலாம்!’ என்கிற நிம்மதிதான் பிரதான காரணம்... சீறிப்பாய்ந்த பல்சரை, சிக்னலின் சிவப்பு விளக்கால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி நிற்கவைத்தேன்... 88, 87, 86 நொடிகள் நகர்ந்தது.. ஹெல்மெட்டை கழற்றி, வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டேன்... அப்போதுதான் பைக்கின் முன்புறத்தை கவனித்தேன்... அடச்ச!.. என்ன இது வெள்ளையா?... காக்காவேதான், கருமம்... இன்னைக்கு அமாவாசை வேறா, எங்கயோ வடையும் பாயாசமும் சாப்பிட்ட காக்கை ஒன்னு என் பல்சரை கழிவறை ஆக்கிருச்சு... முதல்ல உலகத்துல இருக்குற காக்கா எல்லாத்தையும் சுட்டுத்தள்ளனும்... ஏனோ ஒரு காக்கையின் செயலுக்காக, ஒரு இனத்தையே அழிக்க இந்த மனசு சட்டென துணிந்துவிடுகிறது!...

எதைவைத்து துடைக்கலாம்?... கைக்கு வாகாக ஒன்றும் கிடைக்கவில்லை, நொடிகளும் 43, 42 குறைந்துகொண்டே வந்தது... சரியாக அந்த நேரத்தில் இளைஞன் ஒருவன் விளம்பர நோட்டிஸ்’களை ட்ராபிக்கில் நின்றவர்களிடம் விநியோகித்துக்கொண்டிருந்தான்... எப்போதும் அத்தகைய நோட்டிஸ்களை உதாசினப்படுத்தும் நான், இன்றுமட்டும் விரும்பி அதை வாங்கிக்கொண்டேன்... ஆச்சர்யத்தோடுதான் என்னை ஏறிட்டுப்பார்த்தான் அந்த இளைஞன்... அவன் அங்கிருந்து நகர்ந்ததும் அவசர அவசரமாக காக்கையின் எச்சத்தை அதில் துடைத்து, கசக்கி எறிய முனைந்தேன்... அப்போதுதான், அந்த காகிதத்தை எதேச்சையாக கவனித்தேன்... அதில் மேலாக தெரிந்த பெயர், என்னை உள்ளே பிரித்துப்பார்க்க தூண்டியது...

“வளவன் உணவகம்... இனிதே ஆரம்பம்!” ஏதோ ஒரு உணவக விளம்பரம், ஆனால் என் கவனத்தை ஈர்த்தது அந்த விளம்பரம் அல்ல, அந்த பெயர் மட்டும்தான்... வளவன்... மறக்கக்கூடிய பெயரா அது? மனதை விட்டு மறையக்கூடிய பெயரா அது?...

நான் பதினொன்றாம் வகுப்பு படித்தபோது, பன்னிரண்டாம் வகுப்பு படித்த வளவனைப்பற்றி சிறு வர்ணனையை ஒரு நான்கு வரிகளில் சொல்லிவிடுகிறேன்... பெயருக்கேற்ப வளமான உடலமைப்பை கொண்டிருப்பவன்... எப்போதும் துறுதுறுக்கும் அந்த கண்களுக்கு மேலே, வில்லாக வளைந்திருந்த புருவங்கள் மட்டுமே ஆயிரம் சங்கதிகள் பேசும்... `நடவு நட்ட வயலில் அரும்பியிருக்கும் பயிரை போல உதடுகளுக்கு மேலே, வாலிபத்தின் வயதை கணக்கிட வைத்த மீசையை அவன் வலது கை எப்போதும் முறுக்கிக்கொண்டே இருக்கும்... செம்பவள மேனியும், கட்டான உடற்கட்டும் அந்த அழகின் மேன்மையை செம்மையாகவே பறைசாற்றும்... நான்கு வரிகளில் அவனைப்பற்றி இவ்வளவுதானே கூறமுடியும், சுருக்கமாக சொல்வதனால் “அழகன்!” என்று நான்கே எழுத்துகளில் கூட வளவனை வர்ணிக்க முடியும்... 

நண்பன் ஒருவன் மூலம் சயின்ஸ் கைடு வாங்க வளவன் வீட்டிற்கு போனதுதான் வளவனுடனான என் முதல் சந்திப்பு... அங்கு தலையணையில் தலைசாய்த்து, ஒருக்களித்து திருவரங்கநாதனை போல அவன் படுத்திருந்த காட்சி, இப்போதும் பசுமை மாறாமல் கண்களில் நிழலாடுகிறது... 

என் பின்னால் நின்ற கார் பலமான ஹாரன் ஒலியெழுப்பிய பின்புதான், சிக்னலின் பச்சையை கவனித்தேன்... “கனவு காண்றதுன்னா வீட்ல போய் காணுடா @##$%$ டேய்!” மூன்று வண்டிகளுக்கு பின்னால் நின்ற ஆட்டோக்காரர்தான் கத்தினார்... அவசரமாக வண்டியை கிளப்பி, தடுமாற்றத்தோடு பயணத்தை தொடர்ந்தேன்...

ஹ்ம்ம்... வளவனின் நினைவுகள் வண்டியின் வேகத்தைவிட சற்று அதிகமான வேகத்தில் மனதில் பயணித்தது...

முதல்முறை பார்த்தபோதே வளவனின் மீது ஒரு இனம்புரியாத ஒட்டுதல்... அதை முதல் காதலென்றுதான் இதுவரை நினைத்திருக்கிறேன்... அந்த குழப்பத்திற்கு வலிமையான காரணமும் உண்டு... பெரும்பாலும் முதல் காதல் என்பது, ‘அது காதல்தான்!’ என்று உணர்வதற்கு முன்பே உதிர்ந்துவிடுவதுமுண்டு... அதனை இனக்கவர்ச்சி, ஈர்ப்பு என்றல்லாம் சொன்னாலும் கூட, வாழ்க்கையில் காதல் என்றதும் மனதுக்கு தோன்றும் முதல் நினைவே முதல் காதலைப்பற்றியதாகத்தான் இருக்கும்... 

வளவன் மீது மட்டுமல்லாது, அவன் வீட்டு சூழலின் மீதும்கூட எனக்கொரு அலாதியான ப்ரியம் உண்டு... வாசற்படியில் தலைவைத்து படுத்திருக்கும் செவளை நாய், திண்ணையில் மாட்டப்பட்டிருந்த முருகன் படத்திற்கு பின்னாலிருந்த சிட்டுக்குருவி கூடு, முற்றத்தில் ஒரு ஓரத்தில் சாந்து சட்டியில் முட்டைகள் மீதேறி அமர்ந்து அடைகாத்துக்கொண்டிருந்த அடைக்கோழி என்று வளவனை தாண்டியும் ரசிக்க அந்த வீட்டில் நிறையவே இருந்தது... அந்த வீட்டின் மீதான ஈர்ப்புதான், ஒருகட்டத்தில் வளவன் மீதான காதலாக உருமாறியதோ? என்று தோன்றுவதுண்டு... தினமும் இருமுறையாவது அங்கு சென்றுவிடும் அளவிற்கு வெகுசீக்கிரமாகவே அவன் வீட்டில் ஐக்கியமாகிவிட்டேன்...

அறிவியல் புத்தகம் வாயிலாக தொடங்கிய சந்திப்பு, ஒருகட்டத்தில் பாடப்புத்தகங்களை தாண்டியும் எங்கள் இருவரையும் நிறைய பேசவைத்தது... வளவன் இலக்கியம், வரலாறுன்னு நிறைய படிப்பான், அதைப்பற்றி நிறைய பேசுவான்... விடிய விடிய அவன் பேசியதை “ஹ்ம்ம்” கொட்டிக்கொண்டிருந்த இரவுகள் நிறைய... அப்படி ‘ஹ்ம்ம்’கொட்டத்தான் அவன் அதுவரை ஆள் தேடிக்கொண்டிருந்தானோ என்னவோ, என்னை விட்டு விலகவே மாட்டான்... பொன்னியின் செல்வன் நாவலை அவன் விவரிக்கும் அழகிற்கே, காலமும் அவனுடனேயே இருந்துவிடலாம் என்று தோணும்... நந்தினியும், வந்தியத்தேவனும் அந்த தெருவில் நடந்துகொண்டிருப்பதாக உணரும் அளவிற்கு, அவன் விவரிப்புகள் ஆழமாக விரியும்... ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், பாலகுமாரன், சுஜாதா என ஒரு தனி உலகிற்கு என்னை மட்டும் அழைத்துசென்று, அங்கு சிலநேரங்களில் டூயட் கூட பாடுவான்...

சினிமா முதல் உறவினர் சீமந்தம் வரை நானும் அவனுடன் செல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பான், அந்த எதிர்பார்ப்புகள் எனக்கும் பிடித்திருந்தது... 

“என்னடா கங்காரு மட்டும் வந்திருக்கு, குட்டியக்காணும்!”

“உன் முத ராத்திரிக்காவது தனியா போவியா, இல்ல அதுக்கும் செந்திலு கூட வரணுமா?”
என்று எங்கள் நண்பர்கள் சிலர்கூட இருவரின் நெருக்கத்தையும் கேலி பேசுவார்கள், அதை ஒரு துரும்பாகக்கூட மதிக்காமல் கடந்து செல்வான் வளவன்... 

இவ்வளவு நெருக்கமும், ஒட்டுதலும், அன்யோன்யமும் ஒரே நிமிடத்தில் அர்த்தமற்று போனதாக உணரவைத்த தருணத்துக்கு சொந்தக்காரி வித்யா...

“நான் வித்யாவ லவ் பண்றேண்டா செந்திலு!” இப்படித்தான் அன்றொருநாள் பேச்சை தொடங்கினான்...

“எந்த வித்யா?” எந்த வித்யாவாக இருந்தாலும் என் மனம் ஏற்கப்போவதில்லை என்றாலும், குறைந்தபட்சம் குட்டையைக்குழப்ப வழிதேடலாம் என்பதால் அப்படிக்கேட்டேன்...

“உன்கூட பள்ளிக்கூடத்துல படிக்கிறாளே, அவதான்” வளவனுக்கு வெட்கப்படக்கூட தெரியும் என்பதை அப்போதுதான் கவனித்தேன்..

“அய்யய்ய அவளா?... எனக்கு சுத்தமா பிடிக்கலடா அவள... உன் பர்சனாலிட்டிக்கு அவ சரிவர மாட்டா” முகத்தை கோணலாக்கியபடி சொன்னேன்...

“உனக்கு எதுக்குடா புடிக்கணும்? எனக்கு பிடிச்சிருக்கு... அவ பச்சைக்கலர் தாவணி போட்டுக்கிட்டு அன்னிக்கு கல்யாணத்துக்கு வந்தா பாரு, அப்பவே விழுந்துட்டேன்... நின்னா, படுத்தா, தூங்குனா எல்லாமும் அவளாத்தான் தெரியுறா... அவ வானத்துலேந்து எனக்காக குதிச்ச தேவதைடா...” என்று சொல்லிக்கொண்டே இருக்க, எனக்கு அந்த வர்ணனைகளை காதுகொடுத்து கேட்கமுடியவில்லை....

சட்டென எழுந்து, “சரி வளவா, நான் கிளம்புறேன்... அம்மா எங்கயோ போவணும்னு சீக்கிரம் வரசொன்னாக”என சொல்லிவிட்டு கிளம்பினேன்...

“டேய் டேய்... இருடா...” என் கையைபிடித்து இழுத்து, அவனருகே அமரவைத்து, “என் லவ்க்கு நீ ஒரு முக்கியமான உதவி பண்ணனும்!” சொல்லிக்கொண்டே என் கைகளை அவன் கைகளால் இறுக்க பிடித்துக்கொண்டான்...

அவன் கேட்டு நான் மறுப்பதென்பது இயலாத காரியம், என்றாலும் காதலனின் இன்னொரு காதலுக்கு உதவிசெய்வதா? “சீக்கிரம் சொல்லு, நான் போவனும்”

“வித்யாகிட்ட அவளோட நான் தனியா பேசணும்னு சொல்லணும்... அவளோட பேசிட்டா, எப்டியும் மடக்கிடலாம்... ப்ளீஸ்டா, இதை செஞ்சே ஆகணும் நீ” குழைந்து குறுகினான்...

மறுக்கவில்லை, மறுத்தால் இவன் வேறு வழியை யோசிப்பான்... அதேநேரத்தில் வித்யாவிடம் இதைப்பற்றி சொல்லவுமில்லை... இருவரையும் இயன்ற அளவிற்கு நேரடியாக சந்தித்துக்கொள்ள முடியாதபடி சில மாதங்களை கடத்தினேன்... ஆனாலும், எங்கோ கோவிலில் இருவரும் பார்த்து, பேசி, காதலை சொல்லி, அது வீட்டுக்கு தெரிந்து பிரச்சினையாகி.... நிறையவே நடந்துவிட்டது... பிரச்சினை பெரிதாகி, காதல் பிரச்சினை, ஊருக்குள் சாதிக்கலவரமாகும் சூழலும் உண்டானது... பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு கூட எழுதவிடாமல், வளவனை அவன் பெற்றோர் எங்கோ உறவினர் வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டனர்... இதெல்லாம் நடந்து, இன்றோடு வருடங்கள் எட்டு ஆகிவிட்டது...

ஏனோ என் மனம் அழுத்துவதாக தோன்றியது, கைகள் உணர்வற்று போனது.... பைக்கை ஒரு பெட்டிக்கடை அருகே நிறுத்தினேன்... தண்ணீர் பாக்கெட் ஒன்று வாங்கி, முகத்தில் ஓங்கி இறைத்துக்கொண்டேன்... கொஞ்சம் தண்ணீரையும் குடித்துவிட்டு, பைக்கில் சாய்ந்தபடி நின்றேன்...

பள்ளிக்கூட இளைஞன் ஒருவன் ‘கிங்க்ஸ்’ வாங்கிக்கொண்டு, அதை லாவகமாக பற்றவைத்தவாறு மரத்திற்கு பின்பு நின்று புகையால் சக்கரம் சுழற்றினான்... 

அந்த புகை வாசனை மீண்டும் என்னை வளவனை நோக்கி இழுத்து சென்றது...
வளவன் ஒரு ‘புகை’யாளி, என்று சொல்லும் அளவிற்கு எப்போதும் சிகரெட்டும் கையுமாக வாழ்ந்தவன்... அவன் அந்த சிகரெட்டை பிடிக்கும் விதமே ஒரு தனி அழகுதான்... நடுவிரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் இடையே அந்த சுருட்டியை லாவகமாக பிடித்து, அவ்வப்போது அதில் உண்டாகும் சாம்பலை தட்ட கட்டைவிரலை சொடுக்கியபடியே ஊதும்போது, அவன் வாயிலிருந்து வெளிவரும் சக்கரங்களை எண்ணிக்கொண்டு இருப்பதுகூட ஒரு சுகம்தான்.. அதுவும் அவன் சிகரெட்டை மற்றவர்கள் போல உதடுகளின் நடுப்பகுதியில் பொருத்திக்கொள்ளமாட்டான், வலது அல்லது இடது மூலையில்தான் பொருத்திக்கொள்வான்...

“தொடர்ந்து நடு உதட்டுல புடிச்சா, உதடு கறுத்துப்போயிடும்டா... அதனாலதான்...” என்று அதற்கு லாஜிக் வேறு சொல்லிக்கொள்வான்...

“இது ஒரு போதைதானேடா? விட்டுடலாம்ல?” என்று அட்வைஸ் செய்தால், அன்றைக்கு முழுவதும் நம் தலையை பிய்த்து குழம்பும் அளவிற்கு தத்துவம் பேசுவான்...

“வாழ்க்கைல எல்லாமே போதைதான்டா?.. போதைன்னா என்ன?, அதீத பிடிப்பு... இலக்கிய ஆர்வம் ஒரு போதைதான், காதல் கூட போதைதான், தினமும் நாம பேசலைன்னா கஷ்டமா இருக்கே, அந்த ஒட்டுதல் கூட போதைதான்... இப்புடிப்பட்ட பிடிப்புகள் இல்லைன்னா வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்காதுடா...” என்று என்னை அவன்வசப்படுத்தும் அளவிற்கு திசைமாற்றி குழப்பிவிடுவான்....

அலைபேசி அடித்தது... அலுவலக நண்பர்கள்தான்.. படத்திற்கு போவதாக பேசிக்கொண்டார்கள், என்னையும் அழைக்கத்தான் இந்த அழைப்பு... மறுத்தாலும், காரணம் கேட்டு இம்சிப்பார்கள்... அழைப்பை துண்டித்து, அலைபேசியை அணைத்துவிட்டேன்...

மரத்திற்கு பின்புநின்ற இளைஞன், புகைபிடித்துவிட்டு ஒரு ஹால்ஸ் போட்டுக்கொண்டான்... என்னை கடக்கும்போது, லேசான புன்முறுவலை உதிர்த்துவிட்டு நகர்ந்தான்... வெகுநேரமாக அவனை நான் கவனித்ததற்காக அந்த நேசப்பார்வை ஒரு பரிசாக இருக்கலாம்...

படபடப்பு குறைந்திருப்பதாக உணர்ந்தேன்... இனி கிளம்பலாம்... பைக் மீண்டும் அளவான வேகத்தில் பயணித்தது..

ஏழு வருடங்களுக்கு பிறகு, கடந்த வருடம்தான் வளவனை எதேச்சையாக மணப்பாறையில் பார்த்தேன்... அலுவலக விஷயமாக சென்றபோது, உணவக வாசல் ஒன்றிலிருந்த பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கிக்கொண்டிருந்தான்...

“செந்திலுதானே நீ?” என்று அவனாகவே என்னை அடையாளம் கண்டு அருகில் வந்தான்...
வளவனா இது?... அடக்கொடுமையே!... ஏன் இப்புடி ஆகிட்டான்?... தேகம் சுருங்கி, கண்கள் உள்ளே போய், பரட்டை தலையோடு, கூடுதலாக தொப்பை வேறு...

“வளவன்தானே?” என்று எனது அதிர்ச்சியை அவனிடம் வெளிக்காட்டுவிட்டேன்...

“ஆமாண்டா... மறந்துட்டியா?”

“மறக்குறதா?... ஏண்டா இப்புடி ஆகிட்ட?” என் ஆற்றாமையையும் பதிவுசெய்தேன்...

“ஏண்டா எனக்கென்ன?... ஓஹ் இத சொல்றியா? கல்யாணம் , பிள்ளை குட்டின்னு ஆகிடுச்சுல்ல...” தன் தொப்பையை தடவிக்கொண்டே இயல்பாக சொன்னான்... திருமணம் ஆகிட்டதால, தன்னோட தோற்றத்தைப்பற்றி அக்கறை இருக்காதா என்ன?... ஒருவேளை எனக்கு திருமணம் ஆகாததால், அந்த லாஜிக் புரியவில்லையோ?... இந்த சமூகம் இப்படியல்லாம் கூட நம்பிக்கைகளை கட்டவிழ்த்துவிடுகிறது...

“சரி அதவிடு, நல்லா இருக்கியா?...”இயல்பான பரஸ்பர விசாரிப்புகள் கால் மணி நேரங்கள் நீண்டது...

பேசிக்கொண்டிருக்கும்போதே சிகரெட்டைகூட பற்றவைத்தான்... ஆனால், வழக்கமாக புகைபிடிப்பவர்களை போல, நடு உதட்டில் வைத்து... இனி கறுத்துப்போக அவன் உதட்டில் இடம் மிச்சமிருந்தால்தானே அவன் கவலைப்பட... ஏற்கனவே கறுத்து, வெடித்து.... ஏனோ எனக்கு காலத்தின் மீதுதான் கோபம் வந்தது... இதுவும் கூட நடந்து ஓராண்டு முடிந்துவிட்டது... ஏனோ இந்த சந்திப்பிற்கு பிறகுதான், வளவனை பற்றிய நினைவுகள் அடிக்கடி உண்டாகிறது... 

ஒருவழியாக வீட்டை அடைந்துவிட்டேன்... கதவை திறந்து உள்ளே நுழையும்போதே, அம்மாவின் கேள்விக்கணைகள் ‘சர் சர்’ என என்னை தாக்கியது... எதையும் பொருட்படுத்தாமல் சோபாவில் அமர்ந்தேன்...

“என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட?... காபி சாப்பிடுறியா?... போய் முகத்த கழுவிட்டு வந்து உக்காரு, முகமெல்லாம் பிசுபிசுப்பா இருக்கு பாரு...” அப்பப்பா எவ்வளவு கேள்விகள், கட்டளைகள்...

“ஐயோ.. கொஞ்சம் சும்மா இருங்கம்மா... தலை வலிக்குது” கொஞ்சம் சத்தமாகவே சொன்னேன்...

“ஆமா... உன் ஆபிஸ் டெண்ஷன காட்டுறதுக்கு நான்தான் ஆளு பாரு...” பொய்க்கோபம் கொண்டவாறு சமையலறை சென்றுவிட்டார், அங்கும் போய் எனக்கு காபிதான் போட்டுக்கொண்டிருப்பார்...

கடந்த வருட வளவனுடனான சந்திப்பில்கூட, இருவரும் ஒரு கடையில் காபி குடித்தோம்...

“இங்க வடை நல்லா இருக்கும் செந்திலு, சாப்பிடு” சொல்லிவிட்டு வடையை எடுத்து என் கையில் கொடுத்து, எண்ணையை துடைக்க ஒரு தினசரி பேப்பரையும் கொடுத்தான்...

அவனும் தனக்கொன்று எடுத்துக்கொண்டு வடையின் எண்ணையை அந்த நாளிதழில் ஒற்றியபடி சில நொடிகள் அப்படியே நின்றான்... எனக்கு ஒன்றும் புரியவில்லை... நன்றாக அவனை கவனித்தேன், எண்ணையை ஒற்றிய காகிதத்தில் ஏதோ ஒரு பள்ளிக்கூடத்தின் விளம்பரம்... “வித்யாமந்திர் பள்ளி, மாநில அளவில் சாதனை!” என்ற வாக்கியத்திலுள்ள, ‘வித்யா’வை மட்டும் தன் ஆட்காட்டி விரலால் வருடிக்கொண்டு நின்றான்...

“வளவா.... ஏய்..” அவன் தோளை உலுக்கியபிறகுதான் கவனித்தான்...

“இன்னும் நீ வித்யாவ மறக்கலையா?” மெல்ல கேட்டேன்...

“மறக்குறதா?... எப்டிடா முடியும்?.. செத்தாலும் முடியாது...”

“ஏய் உனக்கு இப்ப கல்யாணம் ஆச்சுடா, இன்னும் நினச்சுகிட்டு இருக்குறியா?”

“அதனால என்னடா?... என் மனைவி மேல எனக்கு அவ்வளவு பிரியம் உண்டு, காதலும் உண்டு...  நமக்கு ஆயிரம் காதல் வாழ்க்கைல வரலாம்டா... ஆனாலும், அந்த மொதக்காதல் இருக்கு பாரு, சாவுற வரைக்கும் மனசைவிட்டு போவாதுடா” சொல்லும்போதே அவன் கண்கள் கலங்கியிருந்தது, எனக்கும் கூட...

சில நிமிட மௌனத்திற்கு பிறகு நானே தொடங்கினேன், “சரி, வடைய சாப்பிடுடா... ஆறிடப்போவுது!”..

“இல்லடா... பிடிக்கல... என்னமோ அந்த காதலைப்பத்தி நெனச்சாலே தொண்டை அடச்சுக்குது, எதையும் சாப்பிட முடியுறதில்ல.. முதல் காதல், பசி தூக்கம் எல்லாத்தையும் மறக்கடிக்கிற பசுமையான நினைவுகள்டா” என்றான்...

நான் சொன்னபடியே அம்மா காபியை ஆற்றிக்கொண்டு என்னருகே வைத்தார்... அதை கண்டுகொள்ளாமல் அறைக்குள் சென்று, அப்படியே படுக்கையில் கவிழ்ந்தேன்...

“ஏய் தலை வலிக்குதுன்னு சொன்ன, காபியை குடிச்சுட்டு படு... மாத்திரை எதாச்சும் போட்டுக்கோ...” சொல்லிக்கொண்டே இருந்தார்...

“முதல் காதல், பசி தூக்கம் எல்லாத்தையும் மறக்கடிக்குற பசுமையான நினைவுகள்”னு நிஜத்தை அம்மாகிட்ட சொல்ல நினைத்தாலும், சூழல் கருதி, “வேணாம்மா... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும், என்னைய தனியா விடுங்க!” என்று மட்டும் சொல்லிவிட்டு கண்களை இறுக்க மூடிக்கொண்டேன், கண்ணீர் மட்டும் விழியோரம் கசிந்துகொண்டே இருந்தது... (முற்றும்)

Sunday 14 December 2014

இந்து மதமும், பாலீர்ப்பும்! - திரு.கிஷோர் சுவாமி...



(இந்த கட்டுரை முழுவதும் என்னுடையது கிடையாது... பேஸ்புக் பிரபலம் திரு கிஷோர் சுவாமி அவர்களின் பேஸ்புக் ஸ்டேட்டஸ் பலவற்றையும் தொகுத்து இங்கே பதிந்திருக்கிறேன்... இந்து மதத்தின் மீது தீவிர பற்று கொண்டவராக இருந்தாலும், கிஷோர் அவர்களின் பாலீர்ப்பு தொடர்பான எண்ணங்கள் முற்போக்கு சிந்தனை நிறைந்தவை... மத ரீதியிலான உதாரணங்களின் வழியாகவே ஒருபால் ஈர்ப்பை அங்கீகரிக்க மதவாத அமைப்புகளுக்கு கோரிக்கை விடுக்கும் கிஷோர் அவர்களின் பதிவுகள் உங்களுக்காக.... எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து குரல் கொடுக்கும் கிஷோர் அவர்களுக்கு நன்றிகள்!)

                              

ஸ்டேட்டஸ் 1..

இது கொஞ்சம் 18 + ரக பதிவு என்றும் சொல்லலாம் தான் .... ஆனால் ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தை கேள்வி கேட்க வேண்டிய விஷயங்களில் முக்கியானவை . 

ஓரின சேர்கை குறித்து ஆர் எஸ் எஸ் என்ன சொல்கிறது ? அது கூடவே கூடாது , தடைச் செய்யப் பட வேண்டும் என்கிறது . சரி . சாவர்க்கர் ஓரின சேர்கையில் ஈடு பாடு கொண்ட்டவராக இருந்தார் என்பதைக் கூட ஒதுக்கி வைத்து விடுவோம் . நாம் கேட்கப் போகும் கேள்வி ஓரின சேர்க்கையை எல்லோரும் ஏற்க வேண்டுமா இல்லையா என்பது பற்றியதில்லை . 

நமது கேள்வி , தனி மனித உரிமைகளில் ஆர் எஸ் எஸ் இன் நிலைப்பாடு ஹிந்து மதத்திற்கு ஒத்து இருக்கிறதா என்பது தான் . ஓரினச் சேர்க்கையை ஆர் எஸ் எஸ் ஏற்கவில்லை என்றாலும் ஹிந்து மதம் தவறு என்று சொல்லவில்லை . அதற்கு ரிக் வேதம் முதற்கொண்டு பல உதாரணங்களை என்னால் முன் வைக்க முடியும் .... 

உதாரணத்திற்கு சிவ புராணத்தை எடுத்துக் கொள்வோம் .
சிவ புராணத்தின் படி , கார்த்திகேயன் , போர்களின் தலைவன் . ஞானத்தின் இருப்பிடம் , சம்பிரதாயங்களின் உறைவிடம் . சுப்பிரமணியன் என்றும் குமரா ( மரா என்கிற அரக்கனை அழித்தவர் ) என்றும் முருகன் என்றும் அவரை அழைக்கிறோம் . குஹா என்றும் அழைக்கிறோம் ( குகைகளின் வாழ்பவர்) ...

ஆனால் முக்கியமாக அவருக்கு இருக்கும் பெயர் ஸ்கந்தன் என்பது தான் இப்பொழுது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது . சாந்தன் என்கிற பெயர் , ஸ்கந்த்ரி என்கிற சொல்லிலிருந்து வந்தது , அதாவது , தாக்கி , பாய்ந்து எழுந்து சிந்துவது என்பது தன அதன் பொருள் . சிந்தப் பட்ட விந்தின் விதை என்பது தான் உள் அர்த்தம் . 

மகாபாரதத்தில் என்ன குறிப்பிடப் பட்டுள்ளது ? முருகன் , அக்னியின் மகன் . அக்னியின் விந்தை க்ரித்திகைகள் என்கிற ரிஷி பத்தினிகள் மீது மோகம் கொண்டு அவர்களில் ஒருவரான ஸ்வாஹா என்பவற்றின் கையில் சிந்திவிட , அவர் அதை குளத்தில் எரிந்து விட , அதிலிருந்து முளைத்தவர் ஸ்கந்தன் என்கிற கார்த்திகேயன் என்பது தான் . க்ரித்திகைகள் பாலூட்டி வளர்த்தால் அவரை கார்த்திகேயன் என்று அழைப்பதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது . 

சரி அது மகாபாரதம் , அடுத்து சிவ புராணத்தில் என்ன சொல்லப் பட்டுள்ளது ? சிவனின் விந்தை முழுங்கிய அக்னி யின் செயலை கண்டித்தார் பார்வதி . அது குற்றம் என்றும் தவறு என்றும் அவர் சொல்ல .. அக்னிக்கே உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட , ரிஷி பத்தினிகளின் கருவில் அந்த விந்தை அக்னி ஊற்றிட , அவர்கள் அதை கங்கையில் ஊற்றிவிடுகிரார்கள் . கங்கையிலிருந்து ஒரு புள் வெளியில் விழுந்த அந்த விந்து அழகிய கார்த்திகேயனாக உருவெடுக்க , அந்தக் குழந்தையை எடுத்து வளர்கிறார் பார்வதி தேவி .
ஸ்கந்த புராணம் ( 1.1.27) என்கிற பாகத்தில் வரும் வரிகளில் குறிப்பிடுவது என்ன ? அக்னி , ஒரு ரிஷியாக வேடமணிந்து , சிவனும் பார்வதியும் உறவு கொண்டிருந்தப் பொழுது இடையில் நுழைந்து , சிவனின் விந்தை தனது கையில் வாங்கி அதை உட்கொள்கிறார் , அதன் விளைவில் பிறந்தவர் தான் கார்த்திகேயன் ... 

சரி , இப்பொழுது மேலே குறிப்பிட்டுள்ளவை அனைத்துமே ஹிந்து மதத்தின் உயரிய படைப்புக்கள் தான் , அதில் சந்தேகமே இல்லை . ஓரின சேர்கை ஏற்கப் பட வேண்டுமா வேண்டாமா என்கிற வாதத்திற்க்குள்ளும் நான் செல்லவில்லை . அது தனி மனித விருப்பு வெறுப்பு சார்ந்தது ... ஆனால் ஹிந்து மதம் அதைச் சகித்துக் கொள்வதாகவே புராணங்களும் கூட நமக்கு உணர்த்துகிறது .... ஆனால் ஆர் எஸ் எஸ் சகித்துக் கொள்ள மறுக்கிறது . 

இப்பொழுது சொல்லுங்கள் ஹிந்து மதத்தின் அடிபப்டையான சகிப்புத் தன்மைக்கு எதிரானது தானே ஆர் எஸ் எஸ் ?
                                  ******************************


ஸ்டேட்டஸ் 2…

கீர்த்திவாச இராமாயணம் , வங்க தேசத்தில் ( மேற்கு வங்கம் ) போற்றப் படுகிறது .... பத்ம புராணத்தை அடிபப்டையாகக் கொண்டு படைக்கப் பட்டதாக கருதப் படுகிறது , தமிழில் நாம் கம்ப இராமாவதாரத்தை எப்படி போற்றுகிறோமோ அதைப் போல அவர்கள் கீர்த்திவாச இராமாயணத்தை போற்றுகிறார்கள் ... 

அதில் ஒரு சுவாரசியமான விஷயம் குறிப்பிடப் பட்டுள்ளது ... அது மட்டுமில்லாமல் சுஷ்ருத சம்ஹிதம் என்பதை அடிப்படையாக வைத்து மேற்கோள் காட்டப் படும் விஷயம் அது . 

என்ன சொல்கிறது சுஷ்ருத சம்ஹிதம் ? - இரண்டு பெண்கள் உறவு கொண்டு அதனடிப்படையில் பிறக்கும் குழந்தைக்கு எலும்புகள் இருக்காது என்பது ... வெறும் சதைப் பிண்டமாக குழந்தை இருக்கும் என்பது தான் 

சரி விஷயம் என்னவென்று பாப்போம் . அதாவது அயோத்தியில் திலீபன் என்கிற மன்னன் ஆண்டு வந்தான் , அவனுக்கு குழந்தைகள் இல்லை . அந்த சோகத்திலிருந்து விடு பட புனித கங்கையை தேடிச் சென்றான் , பல ஆண்டுகள் கடும் தவமிருந்தும் , அவனால் கங்கையை காண முடியவில்லை .... இந்த வருத்தத்திலேயே அவன் இறந்துப் போனான் .....
மன்னன் இறந்து விட , வாரிசு இல்லாத அரசாங்கமானது அயோத்தி , இரண்டு ராணிகளும் சோகத்தில் ஆழ்ந்தனர் , பிரம்மனுக்கும் இந்திரனுக்கும் கவலை , இதே வம்சத்தில் தானே ஸ்ரீமன் நாராயணன் அவதாரம் எடுக்கப் போகிறார் , வாரிசு இல்லாமல் வம்சம் எப்படி தழைக்கும் என்று . இது குறித்து பரமசிவனிடம் முறையிட , சிவ பெருமான் ராணிகளுக்கு தரிசனம் தந்ததுடன் ...... 

உங்கள் இருவரில் ஒருவருக்கு மகன் பிறப்பான் என்று ஆசிர்வதிக்கிறார் ... அதைக் கேட்ட ராணிகள் , " நாங்கள் இருவரும் விதவைகள் , அப்படியிருக்க எங்களுக்கு எப்படி குழந்தை பிறக்கும் என்று வினவ .... " நீங்கள் இருவரும் உடலுறவு கொள்ளுங்கள் , எனது ஆசிர்வாதத்துடன் உங்களுக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைகிறார் ..... 

அப்படிப் பிறந்த மகன் பாகிரதன் , சதைப் பிண்டமாக மட்டுமே இருக்க சரையு நதிக்கரையில் அஷ்டவக்ர முனிவரின் ஆசியினால் அழகிய வடிவைப் பெறுகிறார் , அவரது தந்தை மற்றும் மூதாதையர்கள் கங்கையை கொண்டு வர முயற்சி மேற்கொண்டதைப் பற்றி அறிந்த பாகிரதன் தனது மூதாதையர் செய்ய முடியாத செயலான கங்கையை கொண்டு வரும் முயற்சியில் இறங்க ..... கடும் தவத்திற்குப் பின்னர் கங்கையை மேல் லோகத்திலிருந்து நமக்கு கொண்டு வந்தார் ..... இதை மனதில் வைத்து தான் கடுமையான செயல்களை பகீரத பிரயர்த்தனம் என்று குறிப்பிடுவதுண்டு ...... 

சரி இரண்டு பெண்கள் உறவு கொள்வது என்பதை புராணங்கள் அனுமதிக்கிறது , அப்படிச் செய்யுங்கள் என்று சிவ பெருமானே கூறுகிறார் .... ஆர் எஸ் எஸ் அதை எதிர்பதேன் ? இரண்டு பெண்கள் உறவு கொண்டு பிறந்த பகீரதன் கொண்டு வந்த கங்கை புனிதமானது , இரண்டு பெண்கள் உறவு கொள்வது கலாச்சார சீர்கேடா ? என்னப்பா உங்க லாஜிக்
பி . கு : அந்த வம்சத்தில் அதற்கு பிறகு பிறந்தவர் தான் ஸ்ரீ இராமர்
                               ********************************


ஸ்டேட்டஸ் 3…

 டாக்டர் சேகர் என்பவர் சபரிமலா பிள்க்ரிமேஜ் (SABARIMALA PILGRIMAGE ) என்கிற புத்தகம் ஒன்றை வெளியிட்டார் , அதில் அர்த்தசாஸ்திரத்திலும் , மனு ஸ்ம்ரிதியிலும் வரும் வார்த்தையான அயோனி ( யோனியின் உதவியில்லாத ) என்பது தான் அயோனி ஜாதா என்கிற பெயருக்கு காரணம் என்றும் , அதுவே ஐயப்பன் என்று பெயர் மருவியதாகவும் குறிப்பிடுகிறார் . அதாவது யோனியின் உதவியில்லாமல் , இரண்டு ஆண்களின் உறவில் பிறந்த குழந்தை என்று புலப்படுகிறது .... 

ஆக ஆண்கள் கடவுளாக இருக்கையில் உறவு கொள்ளலாம் , மனிதர்கள் என்று வரும் பொழுது தான் ஆர் எஸ் எஸ் எதிர்க்கும் என்று இதை பொருள் கொள்ளலாம் தானே

                             **********************************



ஸ்டேட்டஸ் 4…

பிள்ளையார் உருவான கதை குறித்து பல கோணங்களில் பல புராணங்களில் கூறப் பட்டுள்ளது , அதில் ஒருபடைப்பு ஜெயத்ரதர் எழுதிய ஹரிசரித சிந்தாமணி .... 

அதில் குறிப்பிடப் பட்டுள்ளது என்னவென்றால் ,பார்வதி தேவி குளித்து முடித்தப் பின்னர் அவர் குளித்த நீரானது அவரது உடல் அழுக்குகளுடன் கங்கையில் சேர்கிறது , அந்தத் தண்ணீரை மாலினி என்கிற பெண் யானை குடித்து விட , அது கற்பமாகி விடுகிறது , அது பெற்ற குழந்தை தான் பிள்ளையார் 

ஒரு பென் குளித்த வீரியத்துடன் இருக்கும் நீரை குடிப்பதால் இன்னொரு பெண்ணுக்கு கரு உண்டானதாக சொல்லப் பட்டுள்ளது . அதாவது இரண்டு பெண்கள் உறவு கொள்வதற்குச் சமமாக கூறப்பட்டுள்ளது ....

இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால் , மதத்தை கொச்சை படுத்துவதற்கு என்பதை விட , பல கோணங்களில் நமது மதம் பார்க்கப் பட்டுள்ளது , அதை எல்லாமும் உள் வாங்கும் மதமாக அது இருந்ததால் தான் இன்றளவும் அது நிலைக்கிறது ... இந்த ஆர் எஸ் எஸ் போன்ற மத வெறி கும்பல்கள் , ஒரு குறுகிய கோணத்தில் மட்டுமே மதத்தை பார்க்க வேண்டும் என்கிற சிந்தனையை திணிப்பதால் , மதத்தின் அடித்தளத்தையே அசைக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்
                               *****************************




ஸ்டேட்டஸ் 5…
சரி அடுத்த சுவாரசியமான விஷயத்தை பார்ப்போமா ... இது பத்ம புராணத்தில் இருக்கும் விஷயம் . 

அர்ஜுனன் ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணரிடம் அவரது ராச லீலையைக் காண வேண்டும் என்று கோரிக்கை விடுக்க , அதைக் அர்ஜுனன் காணக் கூடாது என்று ஸ்ரீ கிருஷ்ணர் தடுத்து விடுகிறார் , ஆனால் அர்ஜுனனோ பிடிவாதமாக இருக்க , திரிபுரசுந்தரி தேவியை அர்ஜுனன் வணங்கினால் , தனது ராச லீலையை காணும் அனுபவம் கிட்டும் என்று சொல்கிறார் .... 

அர்ஜுனனும் அவ்வாறு வேண்டிக் கொள்ள , தேவி திரிபுர சுந்தரியும் அர்ஜுனனுக்கு காட்சியளித்த, கிழக்கு திசையில் இருக்கும் குளத்தில் குளித்து விட்டு ஸ்ரீ கிருஷ்ணரின் ராச லீலையை அனுபவிக்குமாறு ஆசி வழங்கி மறைகிறார் .... 

அவ்வாறு அர்ஜுனனும் குளத்தில் முங்கி எழுந்தப் பொழுது , , அர்ஜுனனுக்கு ஆச்சரியம் , அவர் ஒரு அழகிய பெண்ணாக மாறியிருந்தார் . அர்ஜுநியாக மாறியிருந்த அர்ஜுனன் , பின்னர் அங்கே தோன்றிய கோபியர்களால் அலங்கரிக்கப் பட்டு , ராதா தேவியை வணங்குகிறார் . ராதா தேவி அவரை ஸ்ரீ கிருஷ்ணரிடம் அழைத்துச் செல்கிறார் . 

ஸ்ரீ கிருஷ்ணரின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் அர்ஜுனி ரசித்து அனுபவிக்கிறார் .... கிருஷ்ணரின் ஆணுறுப்பு மஞ்சள் நிற துணியால் மூடப் பட்டிருக்கிறது என்பது வரை விவரிக்கப் படுகிறது . இதை எல்லாம் பார்த்த அர்ஜுனிக்கு மோகம் தலைக்கேற .... ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனியின் கரங்களை பற்றி இழுத்து , காட்டுக்குள் அழைத்துச் சென்று உறவு கொள்கிறார் .... 

உறவு கொண்டு முடிந்தப் பின்னர் , அவரது தோழியரை அழைத்து , அர்ஜுணியை மேற்கில் இருக்கும் குளத்தில் முங்கி எழச் செய்யச் சொல்லி கட்டளையிட , அவ்வாறே அவர் அழைத்துச் செல்லப் படுகிறார் , குளத்தில் முங்கி எழுந்தப் பின்னர் அவர் மீண்டும் அர்ஜுனனாக மாறுகிறார் . 

பத்ம புராணம் - 5.74.60 - இதில் தான் ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனும் உடல் உறவு கொண்டது குறித்து இருக்கிறது , நாரதரும் இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணருடன் உடல் உறவு கொண்டார் என்பதும் பத்ம புராணத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது .... 


அதாவது எல்லா வித இச்சைகளுக்கும் சகிப்புத் தன்மையை கொண்டிருந்த மதம் தான் ஹிந்து மதம்.
                                ****************************